சென்னை: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா காரணாமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க அனுமதி தரப்படவில்லை. அதனால் பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தியது.
இந் நிலையில் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 10 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு நேற்று அனுமதி தந்தது.  ஆனால் பல நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தன.
இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தமிழக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு வருபவர்களில் 90 சதவீதம் பேர் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் வாகனங்களிலேயே வர வேண்டும், தளர்வுகள் வரும் 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.