மதுரை: பொருளாதார சூழலால் எம்பிபிஎஸ் கட்டணம் செலுத்த முடியாமல் ஏழை மாணவர்கள் பாதியிலேயே படிப்பை கைவிடுவது வேதனை தருகிறது என்று  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லையைச் சேர்ந்த கிரஹாம்பெல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மருத்துவ கல்வி கட்டண நிர்ணய குழு, சென்ற ஆண்டின் கட்டணத்தையே நிர்ணயித்தும், சில வகை கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியும் நிர்ணயித்துள்ளது.

இந்தாண்டு தமிழக அரசின் உள்ஒதுக்கீடு காரணமாக,  அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயில இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவர்களின் பெற்றோரால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்விகட்டண நிர்ணயத்தை ரத்து செய்து, குறைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது: மூத்த வழக்கறிஞர் ஒருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப்பள்ளி மாணவரின் கட்டணத்தை ஏற்று கொண்டு உள்ளார். கிட்டத்தட்ட 86 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

ஏழ்மை நிலையால் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், பல வலிகளுக்கு பிறகு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், மீண்டும் பொருளாதார சூழலால் கட்டணம் செலுத்த இயலாமல், பாதியிலேயே படிப்பை கைவிடுவது வேதனை மிகுந்தது. இது முறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசு உன்னத நோக்கத்துடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. ஆனால் கட்டணம் செலுத்த இயலாமல், பாதிக்கப்படுவதை தடுக்க சினிமா நடிகர்கள், மூத்த வழக்கறிஞர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஏழை மருத்துவ மாணவர் ஒருவரை தத்தெடுத்து, அவர்களின் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும்.

இது குறித்து, சுயநிதி கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர், செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.