புதுடெல்லி: தற்போது பல நிறுவனங்களின் பணியாளர்கள், வீட்டிலிருந்தே பணிசெய்து வரும் நிலையில், அவர்களுக்கான மருத்துவ(உடல் நலமற்ற) விடுப்பை அளிப்பதற்கு பல நிறுவனங்கள் தயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில், கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணி செய்கிறார்கள். இந்நிலையில், அவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால்கூட, அதன்பொருட்டு அவர்களுக்கு விடுமுறை தேவைப்படாது என்று நினைக்கின்றன பல நிறுவனங்கள்.
அவர்கள், எப்போதும் ஆன்லைன் தொடர்பிலேயே இருக்க வேண்டுமென்பது அந்நிறுவனங்களின் எண்ணம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தவிர, இதர உடல்நலப் பிரச்சினைகள் என்று வருகையில், வீட்டிலிருந்து பணிசெய்யும் ஊழியர்களுக்கு விடுப்பு என்பது தேவையில்லை என்பதே பல நிறுவனங்களின் எண்ணம்.
எனவே, இதுதொடர்பாக நிறுவனங்களுடைய எச்ஆர் கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்ற கருத்துகள் எழுந்துள்ளன.
தற்போதைய நிலையில், லேசான உடல்நலக் குறைபாடுகளை சந்திக்கும் வீட்டிலிருந்தே பணிசெய்யக்கூடிய பல நிறுவனங்களின் பணியாளர்கள், தங்கள் நிறுவன நிர்வாகத்திடமிருந்து விநோத அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.