சென்னை: இது உலகின் கடைசி நாள் அல்ல; நாங்கள் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்  என்று ஷாருக்கானின் கருத்துக்கு பதிலளித்துள்ளார் கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

மும்பை அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த மோசமான தோல்விக்காக, கொல்கத்தா வீரர்கள் குறைந்தபட்சம் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சாடியிருந்தார், கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான்.

இதற்கு பதிலளித்துள்ள ரஸ்ஸல் கூறியதாவது, ”நான் ஷாரூக்கானின் டிவிட்டர் கருத்தை ஆதரிக்கிறேன். ஆனால், கிரிக்கெட்டின் கடைசி நிமிடம் வரை எந்த முடிவையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் என நினைக்கிறேன். நாங்கள் இன்னும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். எங்கள் வீரர்களால் நான் பெருமைப்படுகிறேன்.

உங்களுக்குத் தெரியுமா, இந்தத் தோல்வியால் நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம். ஆனால், இது உலகத்தின் கடைசி நாள் அல்ல. ஐபிஎல் தொடரில் 2வது போட்டியில் தோற்றுள்ளோம். இதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்குச் செல்வோம்.

கிரிக்கெட்டில் இதுபோன்ற தோல்வியும் ஒரு விளையாட்டுதான். நூற்றுக்கணக்கான டி-20 போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். பல போட்டிகளில் சிறப்பாக பேட் செய்துவரும் அணி, வெற்றி பெறும் கட்டத்தில் திடீரென விக்கெட்டுகளை மடமடவென இழந்துள்ளது. புதிய பேட்ஸ்மென்கள் செட்டில் ஆக முடியாமல் திணறி ஆட்டத்தை இழந்துள்ளார்கள். அதுபோன்ற ஆட்டம்தான் மும்பைக்கு எதிராகவும் நடந்தது.

நான் முன்பு சொல்லியதைப் போல், நாங்கள் நிச்சயமாக இந்தத் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு, மேலே வருவோம். தவறிலிருந்து கற்றுக்கொண்டுவிட்டால், நிச்சயம் மறுபடியும் தவறு செய்யமாட்டோம். நாங்கள் சிறந்த அணி. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் சக வீரர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது” என்றார் ரஸ்ஸல்.