சண்டிகர்: முன்னாள் கேப்டனும் உலகக்கோப்பையை வென்றவருமான மகேந்திரசிங் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவுசெய்ய வேண்டும். அதைப்பற்றி பிறர் பேசுவது முறையற்றது என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங்.

இந்தாண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடர் முடிந்தவுடனே, தோனி அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார் அல்லது தவிர்க்கப்பட்டு வருகிறார்.

மேலும், தனது நிலை குறித்து அவர் வெளிப்படையாக எதையும் அறிவிக்காமலும் இருந்து வருகிறார். எனவே, அவரின் ஓய்வு குறித்த செய்திகளும் வதந்திகளும் ஓயாத அலையாய் கிரிக்கெட் உலகில் அடித்துக்கொண்டே உள்ளது.

“அவரின் ஓய்வு குறித்து பிறர் முடிவுசெய்வதும் பேசுவதும் முறையற்றது என்று நான் கருதுகிறேன். அவர் இந்திய கிரிக்கெட்டிற்கு செய்தது மிக அதிகம். அவர் இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான ஒரு கேப்டன். எனவே, அவருக்கு போதுமான அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

தான் எப்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெளியேற வேண்டுமென்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் மீண்டும் விளையாட வேண்டுமென்று விரும்பினால், அவரின் முடிவை மதிப்பது நமது கடமை” என்றுள்ளார் யுவ்ராஜ் சிங்.