சென்னை:
சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெயமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

தமிழகத்தில் வருகிற 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வரிசையில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் இரண்டும் மாறி மாறி சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

முன்னதாக ஸ்டாலினின் மகள் மற்றும் மருமகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையை நடத்திய நிலையில் தற்போது திரைப்படத் தயாரிப்பாளர் ஜெயமுருகனின் நிறுவனம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் நந்தனத்தில் உள்ள ஜெயமுருகனுக்கு சொந்தமான மதுபான ஆலை மற்றும் மற்ற இடங்களிலும் தற்போது சோதனை நடந்துவருகிறது. ஜெயமுருகனின் நிறுவன இடங்களில் 2019இல் வருமான வரி சோதனை நடந்த நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.