சென்னை,

சிறுசேரி ஐடி ஊழியர்கள் தொடர்ந்து 4வது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அசராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் அருகே சிறுசேரியில் எல்காட் ஐ.டி வளாகம் உள்ளது. இங்கு பிரபலமான அனைத்து ஐடி நிறுவனங்களும் உள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருவதற்கு ஆதரவாக சிறுசேரி ஐ.டி. வளாக ஊழியர்களும் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் திரையுலகினர், வணிகர்கள், தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பீட்டாவை தடைசெய்ய வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.