சென்னை: என்னை கட்சியில் இருந்து நீக்கியது நியாயம் இல்லை; அது ஜனநாயக படுகொலை என ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் தெரிவித்து உள்ளார்.

திமுக மாவட்டச்செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த திமுக எம்எல்ஏ குக செல்வம், பாஜக தலைவர்களை டெல்லி சென்று சந்தித்து வந்தார். இது சர்ச்சையான நிலையில், அவரிடம் விளக்கம் கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு செல்வம் அளித்த பதில் திருப்தி தராததால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளிலும் இருந்தும் நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.
இந்த நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திமுகவில் இருந்து தன்னை நீக்கியது நியாயமல்ல என்று கூறியவர், திமுகவில் இன்னும் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் அவர்களும் வெளியே வருவார்கள் எனக் கூறினார்.
இதுவரை நான் எந்த கட்சியிலும் இணையவில்லை; இது ஜனநாயக படுகொலை. தற்போதைய நிலையில் தான் எந்த கட்சிக்கும் செல்ல நான் விரும்பவில்லை. தற்போது எம்எல்ஏவாக உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் நான் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் வாய்ப்பு எனக்கு உள்ளது. யார் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறார்களோ அந்த கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன்.
திமுக தலைவர் மகன் உதயநிதி ஸ்டாலின் தலையீடு தான் எனது பிரச்சினைக்கு காரணம். திமுகவில் பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.
திமுக தலைமை என்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை. எனது கடிதத்திற்கு பதில் கடிதம் கூட திமுக தரவில்லை. திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.