செளதாம்ப்டன்: இன்று நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா தனது மூன்றாவது போட்டியிலும், இந்தியா தனது இரண்டாவது போட்டியிலும் ஆடவுள்ளன.

ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானையும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தியுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

இந்த இரண்டு அணிகளுமே உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புள்ள அணிகளாக கணிக்கப்படுபவை. அந்தவகையில், இந்த ஆட்டம் அதற்கான முன்னோட்டமாக கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டி இந்திய அணிக்கு கடும் சவாலானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் 200 ரன்களைக்கூட ஆஸ்திரேலியா எட்டாது என்று கணிக்கப்பட்ட நிலையில், அந்த அணியின் பின்கள வீரர்கள் சிறப்பாக ஆடி, அந்த அணியின் ரன் எண்ணிக்கையை 288 என்ற சிறப்பான நிலைக்கு கொண்டு சென்றனர்.

எனவே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செயல்பட்டதைவிட, இந்திய அணி இன்னும் அதிக கவனத்துடன் ஆட வேண்டியுள்ளது என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.