ரோம்: இத்தாலியில் நடைபெறும் சர்வதேச மல்யுத்தப் போட்டித் தொடரின் 53 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்றார்.

இதில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, ஏற்கனவே தகுதிபெற்றுள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்துகொண்டார். இவர் 53 கிலோ மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிக்கு தகுதிபெற்றார்.

இப்பிரிவில், கனடாவின் டயானா மேரி ஹெலன் வீக்கரை எதிர்கொண்டார் வினேஷ் போகத். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வினேஷ், 4-0 என்ற கணக்கில் கனடிய வீராங்கனையை சாய்த்து, தங்கத்தை தட்டிச் சென்றார்.

ஏற்கனவே, உக்ரைன் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற இவர், இந்த வெற்றியும் சேர்ந்ததால், உலக தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.