ஜலாலாபாத்:

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஜலாலாபாத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில்,‘‘ எனது தாய் சோனியா காந்தி இத்தியாலியை சேர்ந்தவர். 2004ம் ஆண்டு பிரதமர் பதவியை சோனியா விட்டுக்கொடுத்தார். இதற்கு பிரதிபலனாக இத்தாலியில் ஒரு சீக்கியர் மேயராக்கப்பட்டார். ஒட்டுமொத்த இந்தியாவும் சோனியாவை ஆதரிக்கிறது. அதனால் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று இத்தாலியில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட சீக்கியர் ஒருவர் பிரச்சாரம் செய்தார். அவர் தற்போது மேயராக சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார் என்றார்.

மேலும் அவர் பேசுகையில்,‘‘பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் நம்பர் ஒன் ஊழல்வாதியாக இருக்கிறார். அதேபோல் நம்பர் ஒன் சர்வாதிகாரியாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் நரேந்திரமோடி ஏன் சுக்பீருடன் கைகோர்த்துக் கொண்டு இருக்கிறார். டெல்லியை போல் பஞ்சாப்பையும் ஆம் ஆத்மி பார்க்கிறது என்று குற்றம்சாட்டினார்.

அதேபோல், டெல்லியில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியை சந்திக்கவுள்ளது. டெல்லியில் விற்றது போது வார்த்தை ஜாலத்தை பஞ்சாப்பில் விற்க ஆம் ஆத்மி முயற்சி செய்கிறது. இந்த ஜாலம் விளம்பரம் மற்றும் சந்தையிட தான் பயன்படும். டெல்லியில் காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்து பஞ்சாப் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் ஆசைப்படுகிறார் என தெரிவித்தார் ராகுல்.

அதோடு, காங்கிரஸ் ஏழை மற்றும் தொழிலாளர்களின் கட்சி. அமிர்ந்தர்சிங் முதல்வராக முன் நிறுத்தப்பட்டுள்ளார். உண்மையும், தைரியமும் கொண்ட இவர் தான் பஞ்சாப் முதல்வராக வர வேண்டும். பஞ்சாப்பை அவர் மறுகட்டமைப்பு செய்வார். காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளிக்க விரும்பவில்லை. இரண்டு ஆண்டுகளில் மாற்றம் கொண்டு வரப்படும். இங்குள்ள போதை பொருள் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசுமதிக்கு நல்ல விலை கொண்டு வரப்படும்’’ என அவர் உறுதிபட தெரிவித்தார்.