ஜோத்பூர்,

விண்கலம் தயாரிக்கும்போது, வெப்பம் தாக்காத வகையில், எஞ்சின்களுக்கு பிளாஸ்மோ கோட்டிங் எனப்படும் புதிய வகை வெப்ப பூச்சு குறித்து கண்டு பிடித்ததற்காக ராஜஸ்தான் விஞ்ஞானிக்கு நாசா விஞ்ஞானி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலம் தயாரிக்கும்போது, அதில் முக்கிய பங்காக, விண்வெளியில் உள்ள வெப்பத்தினால் பாதிப்பு ஏற்படாத வகையில், வெப்ப பூச்சு பூசப்படுகிறது. இதுகுறித்து ராஜஸ்தானை சேர்ந்த டைலர் என்பவர்  பிளாஸ்மா கோட்டிங் என்ற பூச்சு முறையை கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்த செய்தி, செராமிக்ஸ் இண்டர்நேஷனல் அண்ட் தெர்மல் ஸ்பிரே புல்லட்இன் (ceramics international and thermal Spray bulletin) என்ற பத்திரிக்கையில் வெளியானது.

இதை கண்ட நாசா, ராஜஸ்தான் விஞ்ஞானி டைலரின் கண்டுபிடிப்பு குறித்து ஆய்வு நடத்தியது. அப்போது, டைலரின் கண்டுபிடிப்பு அபாரம் என்பது தெரிய வந்தது. இந்த  பிளாஸ்மா கோட்டிங் என்ற பூச்சு விண்வெளி எஞ்சின்களுக்கு பூசப்படுவதால் வெப்பம் தடுக்கப்படுவதாகவும், மேலும், இதற்கான செலவும் மிக்குறைவு என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து, டைலரின் ஆராய்ச்சி குறித்து கவரப்பட்ட   நாசா விஞ்ஞானி ஜேம்ஸ் ஸ்மிஅலேக் (Smialek) டைலரை தொடர்பு கொண்டு அவரது ஆய்வு குறித்து கேட்டறிந்தும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த  ‘விண்வெளி தொழில்நுட்பத்திற்கான தொழில்நுட்பத்தை’  விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படுத்த மிகவும் சாத்தியமாக உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இளம் விஞ்ஞானியான டெய்லர்  சமீபத்தில்தான்  மாளவியா நேஷனல் இன்டிடியூட் டெக்னாலஜியில்  (Malaviya National Institute of Technology)  பிளாஸ்மா ஸ்பிரே கோட்டிங் குறித்து ஆய்வு செய்து பிஎச்டி முடித்துள்ளார். இவரது ஆய்வு  உலக அளவில்  25க்கும் மேற்பட்ட பிரபல பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது.