சென்னை,

மிழகத்தில் ஜாக்டோ, ஜியோவின் போராட்டம் காரணமாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

7வது ஊதிய கமிஷன், பழைய ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடந்த 7ந்தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையிலும்,  போராட்டம் தொடர்ந்து வருகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமை செயலாளரும் கோரிக்கை விடுத்தார். ஆனால், போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அரசு பணிகள் மற்றும் பெரும்பாலான பள்ளிகள் இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து,  போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையாக, அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்க தடை விதிப்பதாக எச்சரித்து வருகிறது.

இதுகுறித்து, அரசின் அனைத்துத் துறை செயலாளர்களுக்கும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்,

அதில் கூறியிருப்பதாவது,

அரசு ஊழியர்கள் சமர்ப்பிக்கும் சாதாரண விடுப்பு, ஒட்டுமொத்தமாக எடுக்கும் சாதாரண விடுப்பு ஆகியவற்றை அனுமதிக்கக்கூடாது என்றும்,  அவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அதை அங்கீகாரமற்ற விடுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவ விடுப்பை அளிப்பதற்கு முன்பதாக, விடுப்பு கேட்டவரை மருத்துவ குழுவுக்கு அனுப்பி, அவரிடம் இருந்து உடல்நிலை குறித்த சான்றிதழை வாங்கி பரிசீலிக்க வேண்டும்.

உடல்நிலை பற்றிய உண்மை தெரியாமல் மருத்துவ விடுப்பை வழங்கக்கூடாது. கொடுக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ், உண்மையிலேயே மருத்துவ காரணங்களுக்காக பெறப்படவில்லை என்று கண்டறியப்பட்டால் அந்த அரசு ஊழியரை தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மேலும், மருத்துவ விடுப்பு கேட்டுள்ள நிலையில் அவர்களின் உடல்நிலை குறித்த உண்மை நிலையை கண்டறியும் வரை அந்த மருத்துவ விடுப்பு காலகட்டத்துக்கான சம்பளத்தை வழங்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.