மும்பை: இடது கை பெருவிரலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்து தொடரிலிருந்து முழுமையாக விலகினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் ஆடவுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், பிப்ரவரி 5 முதல் 17ம் தேதிவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி 24 முதல் மார்ச் 8வரை அகமதாபாத்தில் நடக்கிறது. இந்நிலையில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியினர் மட்டும் அறிவிக்கப்பட்டனர். விரலில் காயமடைந்திருக்கும் ஜடேஜா, 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இவரின் காயம் குணமடைவதற்கு இன்னும் 6 வாரகால அவகாசம் தேவைப்படுவதால் இவர், எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, இவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரிலும் பங்கேற்கமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.