அமராவதி:

டைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஆந்திராவில் பூரண மதுவிலக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. 175 தொகுதிகளை கொண்ட ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க  காங்கிரஸ், பாரதிய ஜனதா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் போட்டியிட்டன. 5 முனை போட்டி நிலவியது.

இதில், 151 இடங்களை கைப்பற்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தை ஆட்சி செய்து வந்த  சந்திரபாபு நாயுடு கட்சி வெறும் 23 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், பவன் கல்யானின் ஜனசேனா ஒரு இடத்தையும் கைப்பற்றியது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எந்தவொரு தொகுதியையும் கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இதையடுத்து வரும் 30ந்தேதி மாநில முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மாநிலத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வர ஆயத்தமாகி வருகிறார்.  அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலம் முழுவதும், மதுவிலக்கு அமல்படுத்த திட்டம் தீட்டி வருகிறார்.

இதற்கான பணிகள், ஜனசைத்தன்ய வேதிகா என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவரான லஷ்ம ரெட்டி என்பவரிடம் ஜெகன் ஒப்படைத்து இருப்பதாகவும், உடடினயாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை கேட்கப்பட்டு இருப்பதாகவும், அல்லது முடியாத பட்சத்தில் சிறிது சிறிதாக மது விலக்கை அமல்படுத்தவும் முயற்சி எடுக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும்,  கூறப்படுகிறது. மதுவின் பிடியில் சிக்கி மீள முடியாமல் தவிப்பவர்களுக்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

5 ஆண்டுகளில் (2024க்குள்) மாநிலத்தில் மதுவிலக்கு முழுவதுமாக அமல்படுத்த ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்து உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.