லண்டன்: வங்கி நிதி முறைகேடு தொடர்பாக சிறையில் உள்ள யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் லண்டனில் வாங்கிய 127 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா  வீட்டை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டின் அடிப்படையில் யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரை அமலாக்கப்பிரிவு துறை  கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை  கைது செய்தது.

யெஸ் வங்கி முறைகேடாகப் பல நிறுவனங்களுக்குக் கடன் வழங்கி, பெரும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது.  கடனைத் திருப்பிச் செலுத்தத் தகுதியில்லாத பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் வழங்கியதால், அந்த கடன் வாராக்கடனாக மாறியுள்ளன. அந்த கடனுக்குப் பிரதிபலனாக அந்த வங்கிகள் ராண கபூரின் மனைவி, மகள்கள் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளன என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து ராணாகபூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்து வாங்கிய அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை கண்டறிந்து முடக்கி வருகிறது. அதன்படி, தற்போது,  லண்டனில் உள்ள அவரது சொகுசு பங்களாவை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

தற்போது சுமார் 127 கோடி மதிப்பிலான அந்த சொகுசு பங்களா, கடந்த 2017 ஆம் ஆண்டு டிஒஐடி கிரியேசன்ஸ் ஜெர்சி லிமிடெட் என்ற பெயரில் 93 கோடி ரூபாய்க்கு ராணா கபூர் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த அடுக்குமாடி குடியிருப்பை அமலாக்கத்துறை முடக்கி  உள்ளது.