ஜெய்ப்பூர்:

துபாயில் இருந்து ஜெய்ப்பூர் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் டயர் திடீரென வெடித்தது. ஆனால், விமானியின் சாதுரியத்தால், அதில் பயணம் செய்த  189 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று காலை  துபாயில் இருந்து ராஜஸ்தான் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 189 பயணிகள் பயணம் செய்தனர். விமானம்  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது திடீரென விமானத்தின் டயர் வெடித்ததால் விமானம் குலுங்கியது. இதன் காரணமாக  பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.

ஆனால் விமானியின் சாதூர்யத்தால், விமானம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் இறக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து இன்று துபாய் செல்லவிருந்த விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விமானத்தின் டயர் வெடித்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்,  விமானத்தில் பிரேக் பிடிக்கும் போது ஏற்படும் சிறு தவறுகள், தரையிறங்கும் போது டயர் சுழலாமை அல்லது ஓடுதளத்தில் விமானத்தின் சக்கரம் வழுக்கும் போதோ டயர் வெடிப்பு சம்பவங்கள் நிகழும் விமான பழுது நீக்கும் பொறியாளர்கள் கூறி உள்ளனர்.