ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. வீரர்களின் உயிரிழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

attack

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் பணியில் ஈடுபடுவதற்காக சிஆர்எஃப் வீரர்கள் வாகங்களில் சென்றுக் கொண்டிருந்தனர். 78 வாகனத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் பயணித்தனர்.

வீரர்களின் வாகனம் லடூமோடு பகுதியை அடைந்ததும் வெடிகுண்டுகளுடன் எதிரே பயங்கரவாதிகள் இயக்கி வந்த வாகனம் ஒன்று சிஆர்எஃப் வீரர்களின் வாகனங்களின் மீது மோதியது. இதில் ஒரு வாகனம் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியது. அந்த வாகனத்தில் இருந்த 8 வீரர்களும் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

அதன்பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டதில் முதலில் 20 வீரர்கள் மரணமடைந்ததாக தகவள் வெளிவந்தது. தற்போது உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயர் ஆதில் அகமது தார் என்றும் அவர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

350 கிலோ வெடிகுண்டுகளுடன் ஸ்கார்பியோ காரில் வந்த ஆதில் வீரர்களின் வாகனம் மீது மோதியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஆதில் வீடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில்,” என் பெயர் ஆதில் ஓராண்டுக்கு முன்பாக ஜெய்ஷில் அமைப்பில் சேர்ந்தேன். ஓராண்டு காத்திருப்புக்குப் பின் ஜெய்ஷில் ஏன் சேர்ந்தேனோ அந்தக் காரணத்தை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன் நான் மேல் லோகம் சென்றிருப்பேன். காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி இது” என்று ஆதில் கூறுவது பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி வீடியோவில் ஆயுதங்களுடன் ஆதில் இருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி டிவிட்டரில் வீரர்களின் தியாகம் வீணாகாது என பதிவிட்டுள்ளார். தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், நாளை ராஜ்நாத் சிங் ஸ்ரீநகர் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.