புதுடெல்லி:
மிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக கூடுதல் ஆவனங்களை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.
 
தமிழர்களின்  பாரம்பரிய  விளையாட்டு  ஜல்லிக்கட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற தமிழர் வீர விளையாட்டுகள் நடைபெற்று  வருவது வழக்கம்.
jallikatuu-2
இந்த விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கனவே தடை விதித்தது.
இதையடுத்து,  ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும்  வழக்குகள் தொடுத்தன.  இதற்கும்  இடைக்காலத் தடை விதித்து  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, நடத்த முடியாமல் போனது.
இந்த வழக்கு வரும் 30ந்தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதன் காரணமாக ஜல்லிக்கட்டு குறித்த,  கூடுதல் ஆவணங்களை தமிழக அரசின் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா  தாக்கல் செய்தார்.
சுமார் 500 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
2014-இல் ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்த பின்பு அதற்கென வளர்க்கப்பட்ட காளைகளின் பராமரிப்பு குறித்தும், அந்த காளைகள் விற்கப்படும் நிலைமை உள்ளிட்டவை குறித்தும் ஆவணத்தில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்புடைய வழக்கு விசாரணை நெருங்கும் நிலையில், மேற்கண்ட கூடுதல் ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
எனவே, அந்த ஆவணங்களைப் படித்துப் பார்த்து தங்கள் தரப்பு பதிலைத் தெரிவிக்க விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், அடுத்த விசாரணையின் போது அவகாசம் கோரும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.