சென்னை:

தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறேன் என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

தமிழகத்தின் மூளை முடுக்குகளில் எல்லாம் வரலாறு காணாத வகையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் இந்தியாவை மட்டுமின்றி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் திரை உலகத்தினர் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில்,‘‘ தமிழகத்தின் உணர்வுகளை மதிக்கிறேன். இதற்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.