டில்லி,

மிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது.

தமிழக இளைஞர்களின் போராட்டம் காரணமாக, தமிழக அரசால் இயற்றப்பட்ட ஜல்லிக்கட்டு அவசர சட்டம்,  குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு,தமிழக அரசிடம் வழங்கி உள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

சட்டத்திற்கான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டுவிட்டதால் தமிழக அரசின் அரசிதழில் ஜல்லிக்கட்டு சட்டத்தை வெளியிட உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினாவில் லட்சக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் உலக நாடுகளையே வியக்க வைத்தது.

இதன் காரணமாக மத்தியஅரசின் ஆலோசனையின் பேரில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது, பின்னர் சட்டமன்றத்திலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றது.  அதைத் தொடர்ந்து அவசர சட்டம்  ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக டில்லி அனுப்பி வைக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு நேற்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து அச்சட்டத்தை  மறுஆய்வு செய்த உள்துறை அமைச்சகம் இன்று தமிழக அரசிடம் வழங்கியது.

டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக அதிகாரியான ககன்தீப்சிங் பேடியிடம் ஜல்லிக்கட்டு சட்டமானது ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விரைவில்  ஜல்லிக்கட்டு சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்படும் என எதிர்பார்கப்பபடுகிறது.