ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி மதுரை அருகே அவனியாபுரம் பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட  திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும்  ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்  மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தியதால் பதட்ட நிலை நிலவுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி  திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் மாணவர்கள் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றினர். இதனை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தடுத்தனர். தொடர்ந்து காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும்  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினர். இதில் கவுதமன் உட்பட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.