சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து, தமிழகம் முழுவதுமே போராட்டக்களமாக மாறி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் கொந்தளித்துபோய் உள்ளனர்.

சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள் திரண்டுள்ளனர்.

மேலும் அனைத்து கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் சாரை சாரையாக மெனினாவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.. ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்

சென்னை ஆவடி அருகே வேல்டெக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் : ஜல்லிக்கட்டுக்காக மொபைல் டவர் மீது ஏறி மாணவர்கள் போராட்டம்.

ஜல்லிக்கட்டுக்காக மதுரை அருகே ஒத்தக்கடையில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் தடையை நீக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை வ.உ.சி. மைதானம் நடைபெற்றது வரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் இயங்கிவரும் தனியார் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருவண்ணாமலையில் 3 ஆயிரம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரணியிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையிலும் கல்லூரி மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தூத்துக்குடியில் உள்ள பிரபல கல்லூரை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரையில் மாணவர்கள், இளைஞர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு அலங்காநல்லூர் நோக்கி படையெடுத்து செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.