(திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து கடந்தவருடம்  எழுதிய கவிதை.. இந்த வருடம் பொருந்துகிறது.)

 

போதும்
எங்களை முட்டாதீர்
இதற்குமேலும் எங்கள்
வால் முறுக்காதீர்
தயவுசெய்து
எங்கள் கொம்புகள் மீது
அரசியல் சாயம் பூசாதீர்
மூக்கணாங் கயிறுருவி
நைலான் கயிறு பூட்டாதீர்
திமிலின் ஒட்டிய ஈயோட்டுவதாய்
ஈட்டி எறியாதே சட்டமே
இனியும் தடுத்தால்
பூம்பூம் மாடாகி விடுவதன்றி
வேறு வழியில்லை
உங்களுக்க ஆகஸ்ட் 15
எங்களுக்கு இன்றுதான்
ஆண்டெல்லாம் எங்களை
அடிமைகொண்ட மனிதனை
ஒருநாள் வென்றெடுக்கும் வாய்ப்புக்காக
வாடி வாசலில் காத்திருக்கிறோம்
ஏறு தழுவுதல் என்ற தமிழன்
எப்படி எங்களை காயம் செய்வான்?
தழுவுதல் குற்றமெனில்
காதலுமில்லை; காளையுமில்லை
அடிமாடு லாபம்
பிடிமாடு பாவமெனில்
பிள்ளைக்கறி லாபம்
பிள்ளைதழுவல் பாவமோ?
ஒவ்வொன்றாய் இழந்த தமிழா
அன்னம் இழந்தாய்
அன்றில் இழந்தாய்
சிட்டுக் குருவிகளையும்
வானில் தொலைக்கிறாய்
கடைசியில் காளையினத்தையும் தொலைத்துவிடாதே!
வேளாண்மைக் கலாசாரத்தின்
உயிர் விஞ்ஞானம் நாங்கள்
எங்களைக்
கட்டித் தழுவிக்
காப்பாற்றுங்கள்!