சென்னை: பிரதமரே சமாதானம் கூறினாலும், ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும் என்று அலங்காநல்லூர் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும் போராட்டம் நடந்துவருகின்றன. போராட்டம் தீவிரமானதை அடுத்து, போராட்டத்தைக் கைவிடும்படி தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். கேட்டுக்கொண்டார். மேலும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடியை நாளை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஓ.பி.எஸ்ஸின் வேண்டுகோளை, அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள்  ஏற்க மறுத்துள்ளனர்.  வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

மேலும், “பிரதமரே சமாதானம் கூறினாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம். ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும். போராட்டத்தை கைவிட்டால் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் அமைதியாகிவிடும். ஜல்லிக்கட்டு தடையை நீக்க முயற்சி எடுக்காது” என்று அவர்கள் தெரிவித்துதள்ளனர்.