ஸ்ரீநகர்:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, அது இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

அவர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக  மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, அவரது காவலை மேலும் 3 மாதம் நீடித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட கடந்த மாதம் 5-ம் தேதியில் இருந்து ஸ்ரீநகர் எம்.பி. பரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரைச் சந்திக்க சமீபத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.க்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சந்திப்பின் விவரங்களை வெளியிட கட்சியினருக்கு அனுமதி அளிக்கவில்லை.

இதுதொடர்பாக, வைகோ உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த ஆட்கொனர்வு மனுவின் விசாரணையின்போது,   பரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், அவரது காவல் மேலும் நீடிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் பொதுப்பாதுகாப்புச் சட்டம் என்பது, பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்து அதிகபட்சம் விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை காவலில் வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை கொண்டு வந்த சட்டத்திலேயே தனயன் சிக்கிக் கொண்டது பரிதாபத்துக்குரியது.