டில்லி:
பெல்லாரி தொகுதியில் ஜனார்த்தன் ரெட்டி பிரச்சாரம் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. ஊழல் வழக்கில் பாஜக.வை சேர்ந்த ஜனார்த்தன் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2015ம் ஆண்டு முதல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வெளியில் உள்ளார்.

இந்நிலையில் இவரது சகோதரர் சோமசேகர ரெட்டி பாஜக சார்பில் பெல்லாரி தொகுதியில் போட்டியிடுகிறார். ஜனார்த்தன் ரெட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஜாமீன் நிபந்தனைகளில் உள்ளபடி அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளனர்.