நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர் கதாநாயகியாக நடிக்கும் ‘குட்லக் ஜெர்ரி’ என்ற படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் பதேகர்சாகேப் அருகே பஸ்ஸி என்ற இடத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது.

அப்போது அங்கு சென்ற விவசாயிகள், “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்தி சினிமா உலகத்தினர் யாரும் ஏன் குரல் கொடுப்பதில்லை” என கேட்டு தகராறு செய்துள்ளனர்.

“எங்கள் சார்பில் ஜான்வி கபூர் விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை அளிப்பார்” என படக்குழு உறுதி கொடுத்ததால், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் படப்பிடிப்பு மூன்று மணி நேரம் தடை பட்டது.

அதே படத்தின் ஷுட்டிங் இப்போது, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விவசாயிகள் கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் ஷுட்டிங் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பு குழுவினர் தங்கி உள்ள ஓட்டலுக்கும் சென்று, அதே ,விவசாயிகள் தகராறு செய்துள்ளனர்.

“டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்தி திரை உலகம் ஆதரவு அளிக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

– பா. பாரதி