சென்னை,

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு இன்று ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனை தமிழ அரசு அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் ஜெ. மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணையை கடந்த அக்டோபர் மாதம் 25ந்தேதி முதல் நடத்தி வருகிறது.

ஜெ.மரணம் குறித்து பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வரும் ஆணையம்,  முன்னாள் தலைமை செயலாளர்கள்  ஷீலா பாலகிருஷ்ணன்,  ராமமோகன் ராவ் மற்றும், ஜெ. உறவினர்களான  ஜெ.தீபா, தீபக், மாதவன் உள்பட அரசு மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு அவரதுவீட்டில்  சிகிச்சை அளித்து வந்த டாக்டர் சிவக்குமார், மற்றும் அப்பல்லோ மருத்துவமன நிர்வாகி பிரதாப் ரெட்டி, சசிகலா, ஜெ.உதவியாளர் பூங்குன்றன், பாதுகாப்பு அதிகாரி பெருமாள் உள்பட பலருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், ஜெ.க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சிவக்குமார் இன்று விசாரணை ஆணையம் முன் ஆஜரானார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த மருத்துவர் சிவக்குமார்,  ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சில ஆதாரங் களை அளித்துள்ளேன் என்று கூறினார். மேலும், தன்னை  மீண்டும் 22ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆணையம் உத்தரவிட்டு உள்ளது என்றும் கூறினார்.

நாளை விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆஜராகவும், நாளை மறுதினம் (10-ந்தேதி) ஜெயலலிதா பாதுகாப்பாளராக இருந்த பெருமாள்சாமி  ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.