சென்னை,

நேற்று இரவு ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் நடைபெற்ற சோதனைக்கு சசிகலா கும்பலே காரணம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த வாரம் தொடர்ந்து சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் 187 வீடுகளில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை யினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன், இந்த சோதனைக்கு பின்னணியாக முதல்வர் பழனிசாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒன்றரை கோடி தொண்டர்க ளின் இதய தெய்வமாக வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவரது வீட்டை கட்சியினர் கோவிலாக மதித்து வணங்கி வருகிறோம்.

கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டி ருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

ஜெயலலிதா வீட்டில் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்ததுதான் இந்த சோதனைக்கு காரணம் என்றும்,  போயஸ் கார்டன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு முழுமுதற் காரணம் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர்தான்.

இவ்வாறு அமைச்சர்  ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.