சென்னை: ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று திரைப்பட இயக்குநரும் லட்சிய திராவிட முற்போக்கு கழகத் தலைவர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

.உடல்நலக்குறைவினால் 75 நாட்கள்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். இதனையடுத்து அன்று நள்ளிரவே தமிழக முதல்வராக  ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார்.

இதன் பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில்,  நேற்று நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.  முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். இதனால், முதல்வராக சசிகலா பதவியேற்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் சசிகலா முதல்வராக  பொறுப்பேற்க இருப்பதை பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

இன்று, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குநரும்,லட்சிய தி.மு.க தலைவருமான டி.ராஜேந்தர், அவசர அவசரமாக சசிகலா முதல்வராவதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வளைதளங்களிலும், மீடியாக்களிலும் சசிகலாவை எவ்வளவுதான் வாரி தூற்றினாலும், எதை பற்றியும் கவலைப்படாமல் செயல்படுகிறார் அவர்.

தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க இருப்து குறித்து, தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பா.ம.க. தலைவர் ராமதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்களை  வரவேற்கிறேன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில், ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள். சசிகலா மீது இத்தனை வழக்குகள் வைத்து கொண்டு முதல்வராவது, தமிழகம் செய்த பாவமா..? இந்தியாவே செய்த பாவமா? தீர்ப்பு வரும்வரை காத்திருக்காதது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்ற சந்தேகம் உள்ளது என்று வெள்ளை அறிக்கை வேண்டும் என்றும் பலர் கேட்டுள்ளனர். இதுபற்றி எவரும் பதில் சொல்லவில்லை. ஏன்  இந்த மவுனம்?

சசிகலா முதல்வராவதை ஜெயலலிதா ஆத்மாவே ஏற்காது.  சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலைதான் இருக்கிறது.  மேலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள்

ஜெயலலிதாவிற்காகத்தான் மக்கள் ஓட்டு போட்டார்கள். ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக தேர்வு செய்தவர் ஜெயலலிதா. இப்போது ஓ.பன்னீர் செல்வத்தை தள்ளி விட்டு விட்டு சசிகலா ஏன் அவசரமாக முதல்வராக வேண்டும்” என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பினார்.