சென்னை,
றைந்த முதல்வர் ஜெயலிதாவின் பாதுகாவலரான அப்பு, ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி உருக்கமாக விடைபெற்றார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்கு  நம்பிக்கையான மெய்க்காவலராக இருந்தவர் பெருமாள்சாமி. ஜெயலலிதா அவரை அப்பு என்று அன்போட அழைப்பதுண்டு.  முதல்வருடன் பல ஆண்டுகள் ஒன்றாகவே பாதுகாவலராக பணியாற்றி அவர் இறக்கும் வரை  அவருக்கு பாதுகாப்பு அளித்தவர் ஏடிஎஸ்பி பெருமாள் சாமி.
ஜெயலலிதாவின்  இறுதி வழியனுப்பு விழாவில், சமாதியில் கடைசியாக அவருக்கு உருக்கமுடன் விடை கொடுத்தது காண்போர் நெஞ்சையும் கலங்க வைத்தது.
jeya-with-perumal-samy
மறைந்த  முதல்வர் ஜெயலலிதா 1991 முதல் ஆட்சிப்பொறுப்பில் இருந்துள்ளார்.  இடையில் சில வருடங்கள் பதவியில்  இல்லாவிட்டாலும் முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் (கோர்செல்) ஏடிஎஸ்பியாக இருந்து திறம்பட பணியாற்றியவர் ஏடிஎஸ்பி பெருமாள் சாமி.
ஜெயலலிதா பாதுகாப்பு வாகனமான கான்வாயில் முக்கிய தலைமை அதிகாரி இவர். இவரன்றி ஒரு அணுவும் அசையாது. ஜெயலலிதா ஒரு இடத்துக்கு செல்கிறார் என்றால் முதலில் பெருமாள்சாமி தான் அந்த இடத்தை சென்று பார்வையிட்டு ஓகே சொன்ன பிறகே ஜெயலலிதா அந்த இடத்திற்கு  வந்து பணிகளை செய்வார்.
முதல்வரின் எண்ணம் அறிந்து, அவரது நன்மதிப்பை பெற்றவர்  பெருமாள் சாமி. முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம், பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களால் அவருக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று, காரில் இருந்து,  இறங்கி  முதல்வர் காருடனேயே ஓடிவருவதை அனைவரும் பார்த்திருப்போம்.
முதல்வர் வாகனம் நின்றவுடன் அவரது எண்ணமறிந்து செயலாற்றுவார். விஐபிக்கள் , தொண்டர்கள் யாராக இருந்தாலும் பெருமாள் சாமி முதல்வர் கண்ணசைவை நோக்கியே செயலாற்றுவார்.
பெருமாள் சாமி மட்டுமல்ல அவருக்கு கீழ் உள்ள காவலர்களும் பெருமாள் சாமியின் எண்ணம்றிந்து இயங்கு வார்கள். முதல்வரின் பாதுகாவலராக பல ஆண்டுகள் அன்புக்குரியவராக விளங்கிய பெருமாள் சாமி முதல்வர் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் குட்டி யானையால் தாக்கப்பட்டு கீழே விழுந்தபோது தாங்கி பிடித்தார்.
முதல்வரின் பாதுகாவலராக மட்டும் அல்லாமல் அவரது விசுவாசியாக மாறிப்போனார்கள் பாதுகாவலர்கள். அவரை மிகவும் நேசிக்கவும் செய்தார்கள்.
முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் பெருமாள் சாமி உட்பட அனைத்து பாதுகாவலர்கள் அவர் நலம் பெற்று வந்து ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்வார் என்று நம்பி இருந்தனர்.
jeya-car
ஆனால் பேரிடியாக மறைவு செய்தி அவர்களையும் தாக்கியது. முதல்வர் உடல் மருத்துவ மனையிலிருந்து கான்வாய் போலவே கிளம்பியது முதல்வர் உயிரோடு இருந்த போது அவர் வெளியே கிளம்புபோது பரபரப்பு தோன்றும் அதே போன்று உயிரற்ற அவரது உடலை உருக்கத்துடன் தங்கள் முதல்வர் வீடு நோக்கி செல்லும் பாதுகாப்பு ஏற்பாட்டை செய்தனர்
மறுநாள் முதல்வர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போதும், அவரது இறுதி ஊர்வலத்திலும் , அவரது சமாதி அமைக்கப்படும் இடத்தில் அவர் சமாதியில் அடக்கம் செய்யப்படும் அனைத்து ஏற்பட்டையும் பெருமாள் சாமி ஏற்பாடு செய்தார்.
அவரது உடல் கடைசியாக சந்தனபெட்டியில் வைக்கப்பட்டு அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு சவப்பெட்டியை மூடும் முன்னர் எங்கிருந்தோ ஓடி வந்தார் பெருமாள் சாமி, கனத்த இதயத்துடன் முதல்வரின் முகத்தை ஆழ்ந்து உற்று நோக்கினார்.
வழக்கமாக முதல்வர் புறப்படும் முன்னர் அவர் கண்ணசைவை நோக்குவார் பெருமாள் சாமி. ஆனால் கண் மூடி மீளா துயிலில் இருக்கும் முதல்வர் அவருக்கு எந்த உத்தரவும் இடாமல் இருக்க சந்தனப்பெட்டியை மூடும் முன்னர் தனது முதல்வருக்கு கனத்த இதயத்துடன் ஒரு அஞ்சலியை செலுத்தினார் பெருமாள் சாமி.
அவரது நன்றி கடன்…. அங்கிருந்த அனைவர் மனதையும் கலங்க வைத்தது.