சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா 25 நிமிடத்தில் முடிவடைந்தது.
தமிழக முதல்வராக, 6வது முறையாக இன்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக குழு, பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், மதுரை ஆதீனம், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்தார்கள்.
தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் விழாவில் பங்கேற்றனர். கடந்த தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்த  நடிகர்கள் குண்டு கல்யாணம், குண்டு ஆர்த்தி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும்கூட விழாவில் கலந்து கொண்டனர்.

கவனர்னர் ரோசய்யா - முதல்வர் ஜெயலலிதா
கவனர்னர் ரோசய்யா – முதல்வர் ஜெயலலிதா

பதவியேற்பு விழா 12 மணிக்குத் தொடங்கி 12.25 மணிக்கு நிறைவடைந்தது. “ஜெயலலிதா என்னும் நான்…”  என்று ஆளுநர் ரோசய்யா தமிழில்  சொல்ல.. அதை ஜெயலலிதா திரும்பச் சொல்லி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டார்.
ஜெயலலிதா உள்பட அனைத்து அமைச்சர்களும் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் ஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதாவும், அமைச்சர்களும்  சேர்ந்து  போட்டோ எடுத்துக் கொண்டனர்.