டெல்லி: பிரதமர் மான் கி பாத் நிகழ்ச்சியில், தேர்வுகளை பற்றி பிரதமர் பேசுவார் என்று நீட், ஜேஇஇ மாணவர்கள் எதிர்பார்த்த சூழலில், பிரதமர் பொம்மைகளை பற்றி பேசியுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மாதம் தோறும் பிரதமர் வானொலியில் உரையாற்றும் மான் கி பாத் நிகழ்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், சமீப காலமாக அவரது பேச்சில் உண்மைத் தன்மை இல்லை என்பதால், அவரது நிகர்ச்சியை புறக்கணிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “பண்டிகை காலம் களைகட்ட தொடங்கியுள்ளதால் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன், பொறுப்புடன் இந்த பண்டிகைகளை மக்கள் கொண்டாட வேண்டும். விநாயகர் சதுர்த்தியின்போது இயற்கை முறையில் செய்த விநாயகர் சிலைகளை பல இடங்களில் காண முடிந்தது. தமிழ்நாட்டிலேயே பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது. விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்விக் கொள்கையில் ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது’ என்று பேசியிருந்தார்.

இது மக்களிடையே வரவேற்பை பெற வில்லை. நாடு தற்போது சந்தித்து வரும் கொரோனா  மற்றும் ஜெஇஇ, நீட் தேர்வுகள் ரத்து மற்றும் புதிய கல்விக்கொள்கை போன்றவை குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் அது குறித்து பேசாமல் பொம்மை தயாரிங்கள் என்று பேசியது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவரது பேச்சு குறித்த வீடியோ, அவரை பின் தொடர்பவர்களின் வெறுப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சி குறித்து ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,

‘தேர்வுகளை பற்றி பிரதமர் பேசுவார் என்று நீட், ஜேஇஇ மாணவர்கள் எதிர்பார்த்த சூழலில், பிரதமர் பொம்மைகளை பற்றி பேசி இருக்கிறார். மாணவர்களின் மனதின் குரலை பிரதமர் மோடி எதிரொலிக்கவில்லை’ என்று  கூறியுள்ளார்.