ஏரியில் குப்பையை கொட்டும் ஜெட் ஏர்வேஸ் வாகனம்

சென்னை,

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது  கழிவுகளை சென்னை ஏரியில் கொட்டி அடாவடி செயலில் ஈடுபட்டு வருகிறது.

இதை தமிழக அரசும், நகராட்சி நிர்வாகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இ-வேஸ்ட்கள் எனப்படும் உபயோகமற்ற எலக்ட்ரானிக் பொருட்கள்  தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு, தமிழக மக்களின் சுகாதாரத்தை பாழாக்கி,. தமிழகத்தில் மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக மாற்றி வருகிறது.

மற்றொரு புறம் மத்திய அரசு, தமிழகத்தில் ஓன்ஜிசி, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி விவசாய நிலங்களை அழித்து வருகிறது.

இன்னொரு புறம் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை கொண்டுவந்து, தமிழகத்தில் கொட்டி நிலங்களை பாழாக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் தற்போது தண்ணீருக்கு மக்கள் அல்லாடி வரும் நிலையில், இருக்கும் ஒருசில நீர்நிலைகளிலும் குப்பைகளை கொட்டி, நீர் நிலைகளை அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

அரசும், தனியார் நிறுவனங்களும் நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் தண்ணீருக்காக மக்கள்  குடங்களுன் ரோடு ரோடாக அலைந்து வரும் நிலையில், பல்லாவரம் அருகே உள்ள ஏரியில் பிரபல விமான நிறுவனடான, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது விமான அலுவலகம் மற்றும் விமான பயணிகளின் கழிவுகளை பல்லாவரம் அருகே உள்ள ஏரியில் தொடர்ந்து கொட்டி தண்ணீரை மாசுபடுத்தி வருகிறது.

ஏற்கனவே அந்த பகுதியில் மக்கள் தண்ணீருக்காக அல்லல்பட்டும் வரும் சூழ்நிலையில், ஜெட் ஏர்வேஸ் குளத்தில் குப்பையை கொட்டி, ஏரியை குப்பை தொட்டியாக மாற்றி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் நடமாட்டம் இல்லாதபோது, விமான கழிவுகளை தொடர்ந்து ஏரியில் கொட்டி வருகிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த அடாவடி செயலை, பல்லாவரம் நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர் நிலைகள் இதுபோன்ற குப்பைகளை கொட்டி, தமிழகத்தை குப்பை தொட்டியாக பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றி வருகிறது…

தமிழகம் இந்தியாவின் குப்பை தொட்டியா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?