டில்லி

டந்த 2015ஆம் வருடம் ஜெட்லியால் கெஜ்ரிவால் மீது போடப்பட்ட மானநஷ்ட வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக ஏற்கனவே கடிதம் அனுப்பி விட்டதாக ஜெத்மலானி கூறியுள்ளார்.

இது பற்றி ஜனதா கா ரிப்போர்ட்டர் என்னும் செய்தி நிறுவனம் தெரிவிப்பதாவது :

டில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் பற்றி தவறான கருத்துக்கள் தெரிவித்ததாக கூறி மானநஷ்ட வழக்கு ஒன்ரு கடந்த 2015ஆம் வருடம் அருண் ஜெட்லியால் கெஜ்ரிவால் மற்றும் ஐந்து ஆம் ஆத்மி பிரமுகர்கள் மேல் தொடரப்பட்டது.  இந்த வழக்கின் குறுக்கு விசாரணையில் ஜெத்மலானி வாதாடும் போது CROOK என்ற ஆங்கில வார்த்தையை அருண் ஜெட்லியை பற்றி கூறியதாக சொல்லப்படுகிறது.  அந்த வார்த்தைக்கு வஞ்சகன் என்றும் பொருள் கொள்ளலாம்.

தன்னை இவ்வாறு தெரிவித்ததற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராம் ஜெத்மலானி ஆகியோர் மீது ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கோரி புதிய வழக்கு ஒன்றை ஜெட்லி பதிந்தார்.  இதையடுத்து அர்விந்த் கெஜ்ரிவால், தாம் அமைச்சரை அவ்வாறு குறிப்பிடச் சொல்லி ஜெத்மலானிக்கு எதுவும் சொல்லவில்லை என நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.

இது குறித்து ராம் ஜெத்மலானி, “நான் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன்.  எனக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்துக்கு பதிலாக அதை தெரிவித்துள்ளே.  நான் அந்த இரு கடிதங்களின் விவரங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை.  கெஜ்ரிவால் விரும்பினால் இரு கடிதங்களையும் வெளியிடலாம்” என சொல்லி இருக்கிறார்.

ஜெத்மலானி எழுதிய கடிதத்தில் அருண் ஜேட்லியைப் பற்றி பல தகாத வார்த்தைகளை கெஜ்ரிவால் தன்னிடம் கூறியதைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.  தவிர தனக்கு ரூ. 2 கோடி ஊதியம் தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

ஆனால், “ஊதியம் தரவில்லை என்றாலும் நான் கவலைப்பட மாட்டேன்.  ஆயிரமாயிரம் பேர்களுக்கு நான் இலவசமாக பல வழக்குகளை வாதிட்டுள்ளேன்.  அதில் இதுவும் ஒன்று என நினைத்துக் கொள்கிறேன்” எனக் கூறி உள்ளார்.