சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக ஜெயலலிதா சவப்பெட்டி வைத்து பிரசாரம் செய்த முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைந்த தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் 12ந்தேதி  தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

தற்போது,  டிடிவி தினகரன் அணியினர் பணப்பட்டு வாடாவில் ஈடுபட்டதும், வருமானவரித் துறையினரின் ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் அடிப்படையிலும் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில, ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள்  தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த மதுசூதனை ஆதரித்து,   மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சவப் பெட்டி போன்ற மாதிரி பெட்டி தயார் செய்யப்பட்டு, அதை பிரசார வாகனத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்  பிரசாரம் மேற்கொண்டார்.

இதற்கு மற்ற அரசியல் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.

அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் மன்னிப்பு கோரினர். இந்நிலையில், ஏற்கனவே இதுகுறித்த புகாரின் அடிப்படையில்,  தேசியக்கொடியை தவறாக பயன்படுத்தி பிரசாரம் செய்ததற்காக, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பன்னீர்செல்வம் அணியினர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.