சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் 5வது முறையாக, மேலும் 4 மாத காலம் அவகாசம் வழங்கி  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 5 ம் தேதி திடீரென  மரணம் அடைந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில்  சந்தேகம் உள்ளதாக ஓபிஎஸ் உள்பட அரசியல் கட்சியினர் கூறியதால்,  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார்.

தொடர்ந்து மருத்துவர்கள், சசிகலா உறவினர்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி ஏறக்குறைய முடிவடையும் தருவாயில், அப்போலோ மருத்துவமனை, ஆணைய விசாரணைக்கு தடை பெற்ற நிலையில், கடந்த ஒரு மாதமாக விசாரணை ஆணையம் முடங்கி உள்ளது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது.