ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் அமைச்சர் ஹஜி ஹூசைன் அன்சாரி, கொரோனாவில் இருந்து குணமான அடுத்த நாளே மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹஜி ஹூசைன் அன்சாரிக்கு  செப்டம்பர் 23ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை அளித்ததன் பலனாக, வெள்ளிக்கிழமை அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொரோனா தொற்று குணமடைந்தது தெரிய வந்தது.
இந் நிலையில், ராஞ்சி மருத்துவமனையில் அன்சாரி இன்று மரணமடைந்தார். அவர் ஏற்கனவே இதயம் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
73 வயதாகும் அன்சாரி, 4 முறை மதுப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். அவரது மரணத்துக்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.