டில்லி

டந்த 27 மாதங்களில் சுமார் 7.83% பேர் இந்தியாவில் பணி இழந்துள்ளதாக இந்திய பொருளாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. அரசு தரப்பில் வேலை வாய்ப்பை அதிகரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்னும் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொது மக்களும் கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வேலை இழப்பும் தற்போது அதிகரித்து வருகிறது.

மத்திய பொருளாதார மையம் இது குறித்த ஆய்வு அறிக்கையில், “இந்தியாவில் தற்போது வேலை இழப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. கடந்த 27 மாதங்களில் 7.83% பேர் வேலை இழந்துள்ளனர். அதாவது சுமார் 1.1 கோடி பேர் வேல இழந்துள்ளனர். அதைப் போல் புதிய வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கையும் 1.09 கோடி அளவுக்கு குறைந்துள்ளது.

கடந்த வருடம் சுமார் 40.78 கோடி பேர் புதிய வேலை வாய்ப்பை பெற்றனர். ஆனால் இந்த வருடம் அதில் 8.46% புதிய வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. இவ்வாறு வேலை இல்லாதோர் அதிகம் உள்ள மாநிலங்களில் திரிபுரா மற்றும் அரியானா ஆகிய இரு மாநிலங்கள் உள்ளன. திரிபுராவில் 28.8% மற்றும் அரியானாவில் 24.4% வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.

குறிப்பாக கிராமப்புறங்களில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு கடுமையாக குறைந்துள்ளது. சுமார் 83% கிராமப் பெண்கள் வேலைகளை இழந்துள்ளனர். இது நமது மொத்த மக்கட்தொகையில் மூன்றில் இரு பங்காகும். அதே நேரத்தில் கிராம பகுதிகளில் உள்ள ஆண்களுக்கான வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.” என குறிப்பிடப் பட்டுள்ளது.