சென்னை: சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில், மொத்தம் 131 பணியிடங்கள் நேரடித் தேர்வு வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளோர் பிப்ரவரி 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎம்டிஏ -இல் அமைச்சு மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் உள்ளன. இதில் 171 பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி தேர்வு கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, இவற்றில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதற்கான அறிவிக்கையை ரத்துசெய்யப் போவதாக சிஎம்டிஏ நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனாலும், ஆண்டுகள் கடந்தும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், இளநிலை உதவியாளர், மூன்றாம் நிலை சுருக்கெழுத்தர், தட்டச்சர், களப் பணியாளர் மற்றும் செய்தியாளர் ஆகிய நிலைகளில் 131 பணியிடங்களை நிரப்ப சிஎம்டிஏ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோர், சிஎம்டிஏ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பிப்ரவரி 24ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.