வாஷிங்டன்

மெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் நேற்று நடந்த விழாவில் இந்தியர்களுக்குச் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் 3 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.  குடியரசுக்கட்சி சார்பில் டிரம்ப் இரண்டாம் முறையாக போட்டியிடுகிறார்.  முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயக கட்சி வேட்பாளராகக் களம் இறங்கி உள்ளார்..  இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

நேற்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் 74 ஆம் சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்கள்.   இந்நிகழ்வில் ஜோ பிடன் கலதுக்கொண்டு உரையாற்றினார்.   அவர் தனது உரையில், இந்திய மக்களுக்குத் தனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது உரையில், ”இந்தியாவுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், சிவில் அணு ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு நான்தான் பணியாற்றினேன். நான் அப்போது இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்புநாடுகளாக மாறினால், கூட்டாளிகளாக இருந்தால், இந்த உலகம் பாதுகாப்பானதாக மாறும் என்றேன்.   அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால், இந்த வார்த்தையை நான் தொடர்ந்து நிறைவேற்றுவேன்.

தற்போது இந்தியா சந்தித்து வரும் பல உள்நாட்டுப் பிரச்சினைகளிலும், எல்லைப் பிரச்சினைகளிலும் அச்சுறுத்தல்களிலும் அந்நாட்டுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். அத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும், பெரிய சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றம், உலக சுகாதார பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்போம்.

அதுமட்டுமல்லாமல் இரு நாடுகளிலும் ஜனநாயகத்தை வலுப்பெறுவதற்கு உழைப்போம்.ஏனெனில் இரு நாடுகளிலும் உள்ள பன்முகத்தன்மைதான் பரஸ்பர வலிமை ஆகும்

இவ்விரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் ஆழம் அதிகரித்து மக்களுக்கு இடையிலான நட்புறவு வளரும்.  நான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் நலனில் அக்கறையும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

நான் எனது தொகுதியான டெலாவேரிலும், செனட்டில் உள்ள என்னுடைய அலுவலக ஊழியர்கள், ஒபாமா நிர்வாகத்தில் பணியாற்றியபோது இருந்த காலகட்டம் என அனைத்திலும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அதிகமான வாய்ப்பு அளிக்கப்பட்டது.  ஆனால் தற்போதைய அதிபரின் நிர்வாகத்திலும் இந்தியர்களுக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கப்பட்டதில்லை.

மேலும் துணை அதிபர் பதவிக்கு என்னுடைய தோழி கமலா ஹாரிஸைத் தேர்வு செய்துள்ளேன். அமெரிக்க  இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ஒரு பெண் துணை அதிபர் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடுகிறார்.

நமக்கு கமலா ஹாரி்ஸைப் பற்றி நன்கு தெரியும்,  அவர் மிகவும் திறமைசாலி.  கமலா எந்தச் சூழலுக்கும் தன்னை ஆட்படுத்தி, அறிவுப்பூர்வமாகச் செயல்படக்கூடியவர் ஆவார், அவரின் தாய் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்ததை நினைத்து கமலா பெருமைப்படுகிறார்.  கல்வி கற்க அமெரிக்காவுக்கு வந்து திருமணம் செய்து, இரு குழந்தைகளைப் பெற்று தனது தாய் வளர்த்ததை பெருமையாகக் கொள்வதை நான் மதிக்கிறேன்.

நமது அமெரிக்கா அனைத்து மதத்தினருக்கும், அனைத்து நாட்டினருக்கும், உரித்தான நாடு, மற்றும் அமைதியாக வாழக்கூடிய நாடு என்ற உறுதி மொழியையும் அளித்துள்ளீர்கள்.   தற்போது இது மாறி, கடினமாகியுள்ளது.  அதாவது ஹெச்-1பி விசா முடக்கம், வெளிநாட்டினருக்குப் பல தடைகள் போன்றவை வந்துள்ளன. ஆயினும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் உழைப்பால்தான் அமெரிக்கா வலிமையாக மாறியது என்பதை மறுக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.