லண்டன்: கோவிட்-19 தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகள் மீறியதால், இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் 5 நாள் தனிமைப்படுத்தலில் இருக்கவுள்ள ஆர்ச்சர், அந்த காலக்கட்டத்தில் மொத்தம் 2 கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார். முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் பிரைட்டனிலுள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார் ஆர்ச்சர். இது பாதுகாப்பு விதிமுறையை மீறிய செயலாகும்.
இதற்காக, மன்னிப்புக் கேட்டுள்ளார் ஆர்ச்சர். ஆனால், அந்த விதிமுறை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்து – விண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, எந்த சிக்கலுமின்றி நடைபெற்று முடிந்தது. தற்போது, ஜூலை 16ம் தேதியான இன்று இரண்டாவது டெஸ்ட் துவங்கியுள்ளது.