டில்லி,

காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தமிழக, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின்  கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூட்டுக்குழுவை அமைத்தது.

இந்த குழுவினர்  காவிரி ஆற்றில், கழிவுகள் கலப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில், காவிரி கரையில் உள்ள சில நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும், தொழிற்சாலை கழிவுகளும் சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கின்றன. கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரால், பயிர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலருக்கு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து ஆய்வு செய்ய, பொதுவான நிபுணர் குழு அமைப்பது குறித்து தமிழகமும், கர்நாடகாவும், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இரு மாநிலங்களிடமும் கருத்து கேட்டு, விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கும் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆய்வு அறிக்கைகள் குறித்த விபரங்களை, இன்று தாக்கல் செய்யும்படி தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலருக்கு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஆறில் கலந்து வரும் மொத்த கழிவுகளில் சுமார் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே கர்நாடக அரசால்  சுத்திகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அபாயகரமான கழிவுகளோடுதான் காவிரி நீர் தமிழகத்தை வந்தடைகிறது.

அபாயகரமான கழிவுகளோடு வரும் காவிரி தண்ணீரில் விளையும் பயிர்களில் வேதிப்பொருட்கள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, ஆற்றில் வளரும் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தமிழக விவசாயிகளுக்கு கர்நாடக அரசு ரூ.2 ஆயிரத்து 400 கோடி இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தொடர் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் காவிரி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தமிழகம் – கர்நாடகம் – மத்திய அரசு இணைந்து கூட்டுக்குழு அமைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூட்டுக்குழுவை அமைத்தது.

இந்த கூட்டுக்குழு வரும் 15ம் தேதி முதல் தனது ஆய்வை தொடங்க உள்ளது.  இந்த குழுவில், தமிழக மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடம் பெறுகின்றனர்.

காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பரத்வாஜ் தலைமையிலான இந்த  கூட்டுக்குழு ஆகஸ்ட்15ம் தேதி முதல் தனது  ஆய்வைத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.