நீதிபதிகள், வக்கீல்களுக்கு கருப்பிலிருந்து விடுதலை..

காவல்துறையினர் என்றால் ‘காக்கி’.. நீதித்துறையினர் என்றால் ‘கருப்பு’’ என , செய்யும் தொழிலை உடைகளில் அடையாளம் காட்டி இருந்தது, காலனி ஆதிக்கம்.

சில விஷயங்களில் கட்டுப்பாடுகளை இறுக்கியும், சில விஷயங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் நடவடிக்கை எடுக்க  நிர்ப்பந்தம் செய்து வரும் கொரோனா, இப்போது, உடைகள் விஷயத்தில் மூக்கை நுழைத்துள்ளது.

கொரோனா காரணமாக வழக்கு விசாரணைகள் இப்போது வீடியோ கான்பரன்ஸ் மூலமே நடந்து வருகின்றன.

வீட்டில் இருந்தாலும், வீடியோவில் வாதாடும் வழக்கறிஞர்கள் மற்றும் வாதங்களைக் காது கொடுத்துக் கேட்கும் நீதிபதிகள், வழக்கமான கறுப்பு உடைகளில் தான் தோன்ற வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இனி, கறுப்பு கோட் மற்றும் கறுப்பு அங்கிகளை அணிய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது, உச்சநீதிமன்றம்.

‘’கொரோனா பரவலைத் தடுக்க மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க உச்சநீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. வழக்கறிஞர்கள் இனிமேல் வெள்ளை நிற சட்டை , (பெண் வழக்கறிஞர்கள்) வெள்ளை நிற சல்வார் கமீஸ் மற்றும் வெள்ளை நிற சேலை அணிந்து உச்சநீதிமன்றத்தில் (நீதிபதிகள் முன்பு) வாதாடலாம்’’ என உச்சநீதிமன்றம் நேற்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

‘’இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை ‘’ என்று வர்ணித்துள்ளார், மூத்த வழக்கறிஞர் கபில்சிபல்

வழக்கம்போல் நீதிமன்றங்கள் திறக்கப்பட்ட பின் இந்த ’டிரெஸ் கோட்’ தொடருமா ? என்பது தெரியவில்லை.

– ஏழுமலை வெங்கடேசன்