சென்னை:
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, நாளை (5ந்தேதி) தமிழகம் முழுவதும்  ஒரு நாள் முழு பொது முடக்கம் நடைபெற உள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 6வது கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊடங்கு ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்திலும் சில மாவட்டங்களைத் தவிர்த்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த  மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் முழு பொது ஊரடங்கு என்றும், அன்றைய தினம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமானவை மட்டுமே இயங்கும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
தற்போது, சென்னை  உள்பட 6 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த முழு பொது முடக்கமானது, தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கமாக வரும் திங்கள்கிழமை முதல் மாறவுள்ளது.
இந்த நிலையில் தமிழகஅரசு அறிவித்துள்ளபடி நாளை மாநிலம் முழுவதும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.
இதன்பிறகு, அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 12ந்தேதி)   தமிழகம் தழுவிய அளவில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.