ஜூன் 21: இன்று சர்வதேச யோகா தினம் 6வது ஆண்டாக உலகம் முழுவதும் கொண்டாடப்படு கிறது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள மன அழுத்ததைப் போக்க ஒவ்வொருவரும் யோகா, தியானங்கள் செய்வது உடல்நலத்திற்கு நலமளிக்கும்.

இந்தியாவின் பாரம்பரியமான, ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். அதற்காக ஜூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார்.

இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள்  ஆதரித்தன.  அதையடுத்து, 2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஜூன் 21 ஆம் நாளை `பன்னாட்டு யோகா நாளாக` அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஐ.நா.சபையில் 177 நாடுகள் ஆதரவளித்தன. அத்துடன் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், துருக்கி, ஈரான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட், கத்தார் மற்றும் ஓமன் உள்பட  47 இஸ்லாமிய நாடுகளும் ஆதரவளித்தன.

ஆனால்,  பாகிஸ்தான், சவுதி அரேபியா, மலேசியா, புருனே, கேமரூன், லிபியா ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள், வடகொரியா, எஸ்தோனியா, நமீபியா, ஜாம்பியா உள்ளிட்ட நாடுகளும் இதை ஆதரிக்கவில்லை. இருந்தாலும் பெரும்பாலான ஆதரவுடன் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் முறையாக 2015 , ஜூன் 21-ம் தேதி  சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு 6வது முறையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பழங்கால இந்திய மரபின் விலைமதிக்க முடியாத பரிசே யோகாவாகும். மனதிற்கும் உடலுக்கும் இடையில் இயைபை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஓர் ஆன்மீகத் துறை அது. யோகாவின் முக்கியத்துவம் உலக சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தடுப்பு, உடல்நல மேம்பாடு, பல வாழ்க்கைமுறைக் கோளாறுகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் யோகாவின் முக்கியப்பங்காற்றி வருகிறது.

யோகா, ஒருவரின் உடல், மனம், உணர்வு, ஆற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமை யான கருத்துரு. இதன் அடிப்படையில் யோகா நான்கு பெரும் வகைகளாக பிரிக்கப்படுகிறது:

கர்ம யோகாவில் உடலைப் பயன்படுத்துகிறோம்;

ஞான யோகாவில் மனதைப் பயன்படுத்துகிறோம்;

பக்தி யோகாவில் உணர்வையும்;

கிரியா யோகாவில் ஆற்றலையும் பயன்படுத்துகிறோம்.

ஞானி பதஞ்சாலி, யோக அறிவியலை குறியீடாக்கி, அதன் எட்டு பிரிவுகளாக பிரித்து அஷ்டாங்க யோகா  என்று அழைத்தார்.

அவைகள்,  யமா, நியமா, ஆசனா, பிரணாயமா, பிரத்யாகரா, தாரணா, தியானா மற்றும் சமாதி.

யோகாவின் பொதுவான வடிவம் பல்வேறு ஆசனங்கள் ஆகும். அவை உடலுக்கும் உள்ளத்திற்கும் நிலைத்தன்மையைக் கொண்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆசனமும் வெவ்வேறு பலன்களைத் தரும். இந்த ஆசனங்களை அவரவர் திறனுக்குத் தக்கபடி ஒரு யோகா குருவின் வழிகாட்டுதல் படி பயிற்சி செய்ய வேண்டும்.

தடுப்பு மற்றும் ஊக்கும் தன்மைகளால் மட்டுமன்றி, பல்வேறு வாழ்க்கை முறை நோய்களையும் கோளாறுகளையும் கட்டுப்படுத்துவதால் யோகா இன்று உலகம் முழுவதும் புகழ் பெற்று வருகிறது. உள்ளம் மற்றும் உணர்ச்சிக் கோளாறுகளைக் கட்டுப்படுத்துவதில் அது மிகவும் உதவிகரமாக உள்ளது. இதனால், இன்று உலகம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக யோகா பயிலப்படுகிறது.

உடல்பருமன், நீரிழிவு, மிகை இரத்த அழுத்தம், மனக்கலக்கம் ஆகிய ஆரோக்கியப் பிரச்சினைகள் பரவலாக இருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் யோகா ஒரு முழுமையான சுகாதார நடைமுறையாகும்.

உடற்தகுதி, தசை-எலும்பு செயல்பாடு, இதய-இரத்தக் குழல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு யோகா நன்மை பயக்கும். நீரிழிவு, சுவாசக் கோளாறுகள், இரத்த அழுத்தம், வாழ்க்கைமுறை குறைபாடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த யோகா உதவுகிறது. மனஅழுத்தம், களைப்பு, மனக்கவலை போன்ற கோளாறுகளைக் குறைக்கவும் யோகா துணை புரிகிறது.

யோகாவை முறையாக பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம் சீராகும், மன அழுத்தம் குறையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புத்  தன்மையை நீங்கும்.
அழகிய உடல் அமைப்பை பெறவும் ஆரோக்கியமாக இருக்கவும் சீரான எடையை பேணவும் யோக நமக்கு வழிகாட்டி வருகின்றது. மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும் யோகா மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளையும் சரிசெய்கின்றது.
யோசிக்கும் திறனை மேம்படுத்தும் தன்மை யோகாவிற்கு உள்ளது. மூளைக்கும் உணர்வுக்கும் சமநிலை இல்லாத நிலை ஆரோக்கியமற்றது.
யோகா செய்வதால் முழுமையான உடல் அமைப்பையும், ஆரோக்கியத்தையும் பெற முடியும். மேலும் நோயற்ற வாழ்வை மகிழ்ச்சியுடனும்,  மன அமைதியுடனும் கொண்டாட முடியும்.
யோகாசனங்களை தினமும் செய்தால், தொப்பை வராமல் தட்டையான வயிற்றை பெறலாம்.
யோகாவின் முலம் இதய நோய்களை கூட குணப்படுத்த முடியும். இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அடைப்பை போக்கி ஆரோக்கியமான இதயத்தை பெற முடிகின்றது.
யோகாவின் மூலம் தசைகள் தளர்வடைவதால் முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளில் இருந்து விடுபடலாம். உட்கார்ந்த இடத்தில் வேலை பார்ப்பவர்களும், டிரைவர்களும் தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் முதுகு தண்டுகளில் பிடிப்புகளை போக்க முடியும்.
மூச்சு பயிற்சியால் சீரான சுவாசத்தை பெற முடியும். யோகா செய்வதால் நுரையீரல்களை சீர்படுத்தி சீரான சுவாசதத்தைப் பெறலாம். அதிலும் ஆழமான மூச்சு பயிற்சி உடல் வலிமையை கூட்டி மன அழுத்தத்தை போக்குகின்றது.
முதுகு வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் யோகா  நிவாரணம் அளிக்கின்றது. இதனால் உடல் வலிமை அடைவதுடன், மூளையும் சீராக செயல்படுகின்றது.
யோகா உடல்பயிற்சி குறித்ததல்ல; நாம், நம்முடனும், உலகத்துடனும், இயற்கையுடனும் ஒன்றாக இருக்கும் உணர்வைக் கண்டுபிடிப்பதைப் பற்றியதே யோகா.
ஒவ்வொருவரும் தினசரி சிறிது நேரமாவது  யோகா செய்து உடல்நலத்தையும் மனநலத்தையும் காப்போம்.