அகாலிதளத்திடம்-‘பணிவு’.. சிவசேனாவிடம்-‘துணிவு’.. அமீத்ஷா அணுகுமுறையால் ஜூனியர் தாக்கரே அதிருப்தி

மிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி முடிவாகவில்லை.

பீகாரில் தொகுதி பங்கீடே இறுதி செய்யப்பட்டு விட்டது.

பஞ்சாபிலும் நீண்ட நாள் தோழமை கட்சியான சிரோமணி அகாலிதளத்துடன் பா.ஜ.க.அண்மையில் பேச்சு நடத்தியது.

அங்கு மொத்தம் 13 இடங்கள் உள்ளன.கடந்த தேர்தலில் அகாலிதளம் 10 தொகுதிகளிலும்,பா.ஜ.க. 3 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

இந்த முறை நடந்த பேச்சு வார்த்தையில் 5 தொகுதிகளை கேட்டது பா.ஜ.க.கடந்த முறை கொடுத்த அதே 3 ,அதே தொகுதிகள் என அகாலிதளம் திட்டவட்டமாக கூறி- ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று உடன்பாட்டை முடித்து கொண்டது.பேச்சு-மூச்சு விடவில்லை-பா.ஜ.க.

பா.ஜ.க. கூட்டணியில் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது சிவசேனா. இது-வாஜ்பாய்-பால் தாக்கரே காலத்து நட்பு.சிவசேனாவுடன் தேர்தல் உடன்பாடு காண  நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை மும்பையில் சந்தித்தார்- அமீத்ஷா.

‘’1995 ஆம் ஆண்டு பார்முலாவை கடைபிடிக்கலாம்’’ என்றார் ஜூனியர் தாக்கரே.

அது என்ன 95 பார்முலா?

அப்போது-அங்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா 171 தொகுதிகளில் போட்டியிட்டு 73 இடங்களில் வென்றது .கூட்டணி கட்சியான பா.ஜ.க.117-ல்போட்டியிட்டு -65-ல் வென்றது.சேனாவின் மனோகர் ஜோஷி முதல்வர் ஆனார்.

இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தலை யொட்டி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலிலும்-அதே பார்முலாவை பின் பற்றலாம் என கோரிக்கை வைத்தார்-தாக்கரே.

அது மட்டுமா?

‘’பா.ஜ.க.வை விட நாங்கள் குறைவான இடங்களை பெற்றாலும் முதல்வர் பதவி எங்களுத்தான்’’ என்று இன்னொரு வேண்டுகோளையும் இணைப்பாக சொருகினார்.

தாக்கரே நிபந்தனையால் தலை கிறுகிறுத்து போன  அமீத்ஷாவுக்கு சில நிமிடங்கள் பேச வாய் வரவில்லை.

’’சட்டப்பேரவை தேர்தலிலும்,மக்களவை தேர்தலிலும் ஆளுக்கு 50: 50’’என்று திடமாக கூறிவிட்டு டெல்லி கிளம்பி விட்டார்.

சிவசேனாவின , உடன்பாட்டை ஏற்றால்- பா.ஜ.க. பேரவை  தேர்தலில் 117 இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும்.ஆனால் அந்தகட்சிக்கு பேரவையில் இப்போதே-122 எம்.எல்.ஏ,க்கள் உள்ளனர்.

அதுவும் கடந்த தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி சேராமல்- தனித்து நின்று ஜெயித்த தொகுதிகள்.

தமிழகத்தை போலவே-

மகாராஷ்டிராவிலும் உடன்பாடு –ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

–பாப்பாங்குளம் பாரதி