கிராம நாட்டாமைகள் தீர்ப்பு எப்போதும் விநோதமாகவே இருக்கும்.
சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதி நாட்டாமையும் ஒரு நூதன தீர்ப்பை வழங்கி அதிர வைத்துள்ளார்.

அங்குள்ள ஜாஷ்பூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ‘லிப்ட்’ கொடுப்பதாக சொல்லி, பணக்கார இளைஞன் நிதேஷ் பகத் என்பவன் தனது ‘பைக்’கில் அழைத்து வந்துள்ளான்.

ஊருக்குள் போகாமல் அந்த ’பைக்’ ஒதுக்குப்புறமாக சென்றுள்ளது. ஆள் அரவமில்லாத இடத்தில் ‘பைக்கை’ நிறுத்திய பகத், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.

அலறிய மாணவி, அவன் பிடியில் இருந்து தப்பி ஓட்டமும், நடையுமாய் வீட்டுக்கு வந்து,’ நடந்த கதையை’ பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

வழக்கம் போல் இந்த விஷயம் ஊர் பஞ்சாயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

‘உச்’ கொட்டிய பஞ்சாயத்து, இந்த குற்றத்துக்கு தண்டனையாக ,பகத் கன்னத்தில் ரெண்டு அப்பு அப்ப உத்தரவிட்டது. பகத்தின் சகோதரி, ’குற்றவாளி’ பகத் கன்னத்தில் இரண்டு அறை விட்டு தீர்ப்பை நிறைவேற்றினாள்.

சபை கலைந்தது. ஆனால் ’இந்த நீதி மன்ற’ நடவடிக்கைகளை யாரோ வீடியோவில் எடுத்து ,சமூக ஊடகங்களில் வெளியிட-
நாட்டாமையின் தீர்ப்பு வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

போலீசார் ஊருக்குள் புகுந்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல்.