கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எஸ்.மணிக்குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சாமித்துரை, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுப் பெற்றவர். கடந்த 2006ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்ற இவர், 2009ம் ஆண்டு நிரந்தர நீதிபதியானார். நீர்நிலை ஆக்கிரமிப்பு, கட்டாய ஹெல்மட் அமல், மழைநீர் சேகரிப்பு போன்ற முக்கிய வழக்குகளில், தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வந்தார்.

சமீபத்தில் எஸ்.மணிக்குமாரை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. கொலீஜியத்தின் பரிந்துரையை தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் குடியரசுத் தலைவரிடம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ஒப்புதல் கோரப்பட்டது.

இந்நிலையில் தற்போது, எஸ்.மணிக்குமாரை கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.